மஹ்மூது நபியின் மறை ஞானம்
நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபாஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.
அவர்கள் காட்டிய முஃஜிஸாத் - அற்புதங்களில் உயர்ந்த நிலையிலிருப்பது, மறைவான விடயங்களைப் பற்றிக் கூறியதாகும். தனது அருமைத் தோழர்களுக்கு ஆயிரமாயிரம் மறைவான விடயங்களை விளக்கிக் கூறியுள்ளார்கள்.
காழி இயாழ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இது பற்றிக் கூறும்போது,
இது தொடர்பான ஹதீதுகளின் எண்ணிக்கையை கணக்கிலெடுத்தால் அது ஆழம் காண முடியாத சமுத்திரமாகும். அதன் நீரை எவராலும் முழுமையாக வெளியேற்ற முடியாது.
மறைவான விடயங்கள் பற்றி நபிகள் நாதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றவைகளில் சிலதைப் பொறுக்கி வாசகர்களி்ன் பார்வைக்குத் தருகின்றேன். அல்லாஹுத் தஆலா நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எத்துணை மறைவான விடயங்கள் பற்றிய ஞானத்தைவழங்கியுள்ளான் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
முதலில் மிகவும் புகழ் பெற்ற நபிமணித்தோழரான ஹுதைபத்துல் யமானி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீதைத் தருகின்றேன். இவரைப் பற்றி நபியவர்கள் “சாஹிபுஸ்ஸிர்று“ “இரகசியமான அறிவுள்ளவர்” என்று புனைப் பெயர் வழங்கினார்கள். ஸஹாபாக்களும் இவரை இப்பெயரால் அழைப்பர் என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
பின்வரும் ஹதீஸ் அபூதாவூத்தில் பதிவாகியுள்ளது. ஹதீது இதுதான்,
“ஒரு தினம் நபியவர்கள் எங்கள் மத்தியில் எழுந்து நின்று பிரசங்கம் செய்தார்கள். கியாமத் நாள் வரை நடக்க இருப்பவைகளில் எதையும் விட்டுவிடாமல் எங்களுக்குக் கூறினார்கள். மனனமிட்டவர் மனனமாக்கினார்கள். மறந்தவர்கள் மறந்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக!
உலக முடிவு நாள் வரை குழப்பத்தைத் தூண்டும் தலைவர்கள், அவர்களைப் பின்பற்றுவோரின் தொகை முன்னூறுகளையும் விட சற்று அதிகமாக அவர் (தலைவர்)களின் பெயர், அவர் தந்தை பெயர், கோத்திரப் பெயர் அனைத்தையும் விலாவாரியாக விளக்கினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறியதில் எவ்விதமான ஐயமும் எழவில்லை”.
ஹளரத் அபுதர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்,
றஸுலுல்லாஹிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிய முன் வானத்தில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் பற்றிய அறிவையும் எமக்கு அறிவித்துத் தந்துள்ளார்கள்.
இமாம் புகாரி, முஸ்லிம் மற்றும் அதிகமான முஹத்திதீன்கள் பின்வருமாறு கூறியுள்ளனர்,
இஸ்லாமிய ஆட்சி கிழக்கு, மேற்கில் எவ்வளவு தூரம் விரிவடையும் என்றும், அங்கெல்லாம் இஸ்லாத்தின் விரோதிகள் எப்படியெல்லாம் மண்கவ்வுவார்கள் என்றெல்லாம் ஸஹாபாக்களுக்கு வாக்களித்துள்ளார்களோ அவையனைத்துமே நிறைவேறி விட்டது.
மக்கா வெற்றி பற்றி அருமைத் தோழர்களுக்கு நபியவர்கள் ஏலவே கூறினார்கள். மக்கா வெற்றி பற்றி எவ்வாறு கூறினார்களோ அந்த நிகழ்வு நடந்தபோது “உங்களுக்கு நான் கூறிய நிகழ்வு இதுதான்” என்று கூறினார்கள். பைத்துல் முகத்திஸின் வெற்றி பற்றியும் ஏலவே நபியவர்கள் தீர்க்கதரிசனமாக் கூறினார்கள்.ஹளரத் தமீமுத்தாரி ரழியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தை ஏற்ற போதும் மிக விரைவில் பைத்துல் முகத்திஸ் வெற்றி பெறும். அப்போது அங்குள்ள ஓர் இடத்தை குறிப்பிட்டு, அந்த நிலத்தை உங்களுக்கு தருகின்றேன் என்று வாக்களித்தார்கள்.
அமீறுல் முஃமினீன் உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹுவி்ன் காலத்தில் ஹிஜ்ரி 16இல் பைத்துல் முகத்திஸ் வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாக்களித்த நிலத்தை ஹளரத் தமீமுத்தாரி ரழியல்லாஹு அன்ஹுவுக்கு அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு வழங்கினார்கள்.
மேலும் சிரியா, ஈராக், யமன் உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம்களிடம் வீழ்ச்சிகாணும் என்றும், அங்கெல்லாம்‘ஷரீஅத்‘ சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறிவிட்டு அங்கு பாதுகாப்பு, நம்பிக்கை நன்கு பேணப்படும் என்றும், ஒரு பெண் தனியாக “ஹைறா” என்ற நகரிலிருந்து பாலை வனங்கள், காடுகள்,வனாந்திரங்கள் அனைத்தையும் கடந்து மக்காவுக்கு அச்சமில்லாமல் செல்லும் காலம் வரும். அப்போது அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எந்த அச்சமும் அவர்களிடம் காணப்படாது என்றும் மொழிந்தார்கள்.
“ஹைறா” என்பது கூபாவுக்கு அண்மையிலுள்ள ஒரு நகரமாகும். நபியவர்கள் கூறிய அனைத்து நாடுகளும், நகரங்களும் அமீறுல் முஃமினீன் உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்டது.
புனித மதீனா முனவ்வறாவில் பயங்கரவாதம் தலைவிரித்தாடும் என்று கூறினார்கள். அன்னார் கூறியபடி யஸீதின் காலத்திலும், இப்னு ஸஊதின் காலத்திலும் சொல்ல முடியாத பயங்கரவாதம் தலைவிரித்தாடியது.
யஸீதின் காலத்தில் “ஹர்ரா” என்ற இடத்தில் குருதியை உறைய வைக்கும் கொடூரக் கொலைகள் அரங்கேறியது. கணக்கற்ற ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். மஸ்ஜிதுன் நபவியில் மூன்று நாட்கள் வரை அதானோ, இகாமத்தோ சொல்லப்படவில்லை. மக்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரங்கள் யஸீதின் காலத்தில் நடந்தேறியது.
யஸீதையும், அவனது கவர்ணர் கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபையும் மிகைத்த கொடூரத்தை இப்னு ஸுஊத் புனித மக்கா, மதீனாவில் அரங்கேற்றினான். இவனின் அக்கிரம செயல்களை மக்கா,மதீனாவின் முப்தியாக இருந்தவரும், சிறந்த வரலாற்றாசிரியருமான ஸைனி தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது “துறறுஸ்ஸனியா”, “குலாசத்துல் கலாம்”, “பித்னதுல் வஹாபியா” போன்ற நூற்களில் விபரித்துள்ளார்கள். அதில் இப்னு ஸுஊதின் அடாவடித்தனம் கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபையும் மிகைத்து விட்டது என்றும், கஃபாவில் தஞ்சமடைந்த உலமாக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை கொன்று குவித்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.
கைபர் வெற்றி பற்றியும், நபியவர்கள் ஏற்கனவே கூறினார்கள். மறுநாள் அலி ரழியல்லாஹு அன்ஹு மூலம் கைபர் கோட்டை கைப்பற்றப்படும் என்று முன் கூட்டியே மொழிந்தார்கள்.
கைஸர், கிஸ்றா மன்னர்களின் கருவூலங்கள் உங்கள் காலடியில் வீழ்ச்சி காணும். அதனை மக்களுக்கு பகிர்ந்தளியுங்கள். என்றும் கூறினார்கள்.
முஸ்லிம் உம்மத் எவ்வாறெல்லாம் பிளபுபடும், அது எத்தனையாக விரிவடையும் என்பது பற்றியும் கூறினார்கள்.
“எனது உம்மத் எழுபத்தி மூன்று கூட்டங்களாகப் பிரியும். அதில் ஒரு கூட்டம்தான் வெற்றி பெறும். அது நானும் எனது தோழர்களும் இருக்கும் வழியில் இருப்போர்” என்றார்கள்.
ஹளரத் அப்துல்லா இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் திர்மிதியில் பதிவாகியிருக்கின்றது.
எனது உம்மத் கண்ணியத்தோடும், பெருமையோடும் இருக்கும். ஈரான், ரோமாபுரி மன்னர்களின் பிரஜைகள் உங்களின் பணியாளர்களாக வருவார்கள். அப்போது உட்கட்சி பூசல் நடக்கும். ஒருவரை ஒருவர் கொல்வதில் கவனமாக இருப்பார்கள். இதன்போது தீயவர்கள் நல்லவர்களை கருவறுப்பார்கள்.
ரோமபுரி ஏதாவது ஒரு வகையில் மீண்டும் (அன்னியரால்) கைப்பற்றப்படும். ஆனால் கிஸ்றாவின் ஆட்சி அடியோடு அழிக்கப்படும். மேலும் கூறினார்கள்.
ஒரு காலம் வரும் நல்லவர்கள் மரணித்து விடுவார்கள். சத்தில்லாத சக்கை போல தீயவர்கள் மிஞ்சுவார்கள். அல்லாஹ்வின் சமூகத்தில் இத்தீயவர்களுக்கு எதுவித பெறுமானமும் கிடையாது.
இமாம் திர்மிதி அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்,
இறுதி நாள் நெருங்கினால் மாதம், வருடங்களின் பறக்கத் எடுபட்டுவிடும். வருடம் ஒரு மாதத்தைப் போன்றும், மாதம் ஒரு வாரத்தைப் போன்றும், வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு தினம் ஒரு நாளிகை போன்றும், ஒரு நாளிகை ஒரு தீப்பொறி (வினாடி) போன்றும், சுருங்கி விடும்.
உமையா கோத்திரத்தார் அதிகாரம் பெற்று ஆட்சி செய்வார்கள் என்றும், அவர்களுள் அக்கிரமக்காரர்களிள் கறைபடிந்த கரங்களால் நிகழக்கூடிய அக்கிரமங்கள் பற்றியும் நபியவர்கள் நவின்றார்கள்.
ஹளரத் ஸஃது இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் இமாம் முஸ்லிம் அவர்கள் பின்வரும் ஹதீதை அறிவித்துள்ளார்கள்,
உமையா வம்சத்தினர் ஆட்சி பற்றியும், ஹளரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு ஆட்சிபீடம் ஏறுவது பற்றியும் கூறிவிட்டு, நீர் ஆட்சியைக் கைப்பற்றும்போது நீதியாகவும், மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று வஸியத் செய்த பின் நீர் ஆட்சி அதிகாரம் பெற்றால் மக்களோடு மென்மையாகவும்,இரக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மேற்கண்டவாறு கூறியதிலிருந்து நிச்சயமாக கலீபாவாக தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன் என்று அமீர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
இமாம் திர்மிதி, பைஹகி, ஹாகிம் ஆகியோர் ஹளரத் அபூஹுறைரா ரழியல்லாஹு அன்ஹு மூலம் மேலும் அறிவிக்கின்றார்கள். இதில் உமையா வம்சத்தினரின் அநியாயங்கள், அக்கிரமங்கள் பற்றி விளக்கும்போது,
“அபுல் ஆஸ்” அவர்களின் பிள்ளைகளின் தொகை முப்பது அல்லது நாற்பதை தாண்டும்போது அவர்களில் மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவர். அல்லாஹ்வின் பைத்துல்மால் பொதுச்சொத்தில் ஒருவருக்குப் பின் ஒருவராக கபளீகரம் செய்து கொள்வர்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அதாவது பைத்துல்மால் பணத்தின் புனிதம் பேணப்பட மாட்டாது. ஒவ்வொருவரும் தனது சக்திற்கேற்ப சூறையாடுவார்கள். மனித உரிமைகள் சிதைக்கப்படும். கொள்ளை, கொடூரம் தலை விரித்தாடும்.முஸ்லிம்களி்ன் பொதுப் பணம் விரயமாக்கப்படும். உமையாக்களின் ஆட்சியில் இவையனைத்தும் நடந்ததாக வரலாறு சாட்சி பகர்கின்றது.
எனது தோழர்கள் மத்தியில் உமர் உயிரோடு இருக்கும்வரை பித்னா - குழப்பம் ஏற்படாது என்று ஏந்தல் நபியவர்கள் கூறினார்கள்.
ஒரு தினம் உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹளரத் அபூதர் ரழியல்லாஹு அன்ஹுவின் கரத்தைப் இறுகப் பிடித்தார்கள்.
பித்னாவுக்குரிய கதவின் பூட்டே! என் கையை விடும் என்று ஹளரத் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிட்டார்கள். இது கேட்ட ஹளரத் உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹு அபூதர்ரே! நீர் என்ன கூறுகின்றீர்? விளக்கமாகக் கூறும் என்றார்கள்.
ஒரு தினம் நாங்கள் நபியவர்களைச் சுற்றி அமர்ந்து வட்டமாக இருந்து கொண்டிருந்தோம். நாங்கள் இருந்த முறை உங்களுக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் மனிதர்களின் தலையை சாய்த்தவர்களாக நெருங்கி வந்து அங்கிருந்தவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டீர்கள். அப்போது கருணையே வடிவான காஸிம் நபியவர்கள் கூறினார்கள்.
“இந்த மனிதர் உங்கள் மத்தியில் இருக்கும் வரை குழப்பம் - பித்னா - உங்களைத் தொடாது என்று”
ஒரு தினம் ஸஹாபாக்களைப் பார்த்து, சமூகத்தின் நீர்க்குமிழிகள் போன்று பித்னா வரும் என்று றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ் உங்களில் யாருக்கு நினைவிலிருக்கின்றது என்று ஹளரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். அச்சபையில்“இரகசிய ஞானத்தைப் பெற்ற ஹளரத் ஹுதைபத்துல் யமானியும் இருந்தார்கள்”.
அமீறுல் முஃமினீன் அவர்களே! இந்த பித்னாவிலிருந்து எதுவும் தங்களுக்கு நேராது. நிச்சயமாக உங்களுக்கும், பித்னாவுக்கு மிடையில் (பித்னாவின்) வாசல் அடைக்கப்பட்டிருக்கின்றது. என்று ஹளரத் ஹுதைபத்துல் யமானி ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிட்டார்கள்.
மீண்டும் அமீறுல் முஃமினீன் ஹளரத் ஹுதைபத்துல் யமானி அவர்களை நோக்கி, பித்னாவின் வாசல் திறக்கப்படுமா? அல்லது உடைக்கப்படுமா? என்று கேட்டார்கள். அது உடைக்கப்படும் என்று ஹளரத் ஹுதைபா அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்படியாயின் அது மூடப்படாது என்று குறிப்பிட்டார்கள்.
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
ஸீறத்துன் நபவிய்யா : பாகம் - 03, பக்கம் - 178
யாரோ ஒரு ஸஹாபி ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹுவிடத்தில் பித்னாவின் வாசல் யார்? என்று கேட்டதற்கு அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு விடை பகர்ந்தனர்.
மீண்டும் ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹுவிடம் இது பற்றிய ஞானம் உமர் ரழியல்லாஹு அன்ஹுவுக்கு உண்டா? என்று கேட்கப்பட்டதற்கு நிச்சயமாக! பகலுக்குப் பின் இரவு வருவது எப்படி நிச்சயமோ அவ்வாறே என்று கூறினார்கள்.
இமாம் புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் பின்வரும் ஹதீதை அறிவிக்கின்றனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள். உதுமான் ரழியல்லாஹு அன்ஹு திருக்குர்ஆனைப் பார்த்து ஓதிக்கொண்டிருக்கும்போது ஷஹீதாக்கப்படுவார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள். நபியவர்கள் கூறியபடியே நடந்தது.
ஹளரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கின்றார்கள்,
உதுமான் ரழியல்லாஹு அன்ஹுவின் குருதியின் சொட்டு திருமறையில் “பஸயக்பீகஹுமுல்லா” என்ற திருவசனத்தில் விழும் என்று நபிகள் நாயகமவர்கள் நவின்றபடியே நடந்தது. அமீறுல் முஃமினீன் உதுமான் ரழியல்லாஹு அன்ஹு மடியில் திருக்குர்ஆனை வைத்துக்கொண்டு ஓதிக்கொண்டிருந்தார்கள்.கிளர்ச்சியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்கினார்கள். அப்போது அவர்களின் குருதி நபியவர்கள் கூறிய திருவசனத்திலேயேதான் விழுந்தது.
அன்னை ஆயிஷா சித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வபாத்தாகுவதற்கு முன் இவ்வாறு கூறினார்கள்,
“எனது குடும்பத்திலிருந்து எனது மகள் பாத்திமாவே என்னை முதலில் சந்திப்பார்கள் என்று. நபியவர்கள் வபாத்தாகி சரியாக ஆறு மாதங்கள் கடந்த பின் சொர்க்கத்தின் தலைவி பாத்திமா நாயஹி வபாத்தானார்கள்”.
எனக்குப் பின் எனது மனைவிமார்களில் ‘கை நீளமான’ பெண்னே என்னை முதன் முதலில் சந்திப்பார் என்று நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
உம்முஹாத்துல் முஃமினீன்களுல் அன்னை ‘ஸைனப்’ ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அதிகம் தர்மம் செய்வார்கள். இதனைத்தான் நபியவர்கள் கை நீளமான பெண் என்று குறிப்பிட்டார்கள். நபியவர்கள் கூறியபடியே நடந்தது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்கள் தோழர்களைப் பார்த்து எனக்குப் பின் அறபுகளில் கணிசமானோர் முர்தத் ஆவார்கள். அவர்களுடன் போர் மூழும் என்று குறிப்பிட்டபடி நபியவர்களுக்குப் பின் ‘முஸைலாமத்துல் கத்தாபின்’ குழப்பம் கடுமையாக விஸ்வரூபம் எடுத்தது.கணிசமானோர் அவனை நபியாக ஏற்றனர்.
கலீபா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அவனோடு போர் தொடுத்தார்கள். போர் கடுமையாக இருந்தது. இறுதியில் வஹ்ஷியின் கையால் கொடூரமாக கொல்லப்பட்டான். கலீபா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகுவதற்கு முன்பு முர்தத் ஆனோர் மீண்டும் இஸ்லாமானார்கள்.
ஹளரத் உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள். றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை என் காதால் நான் கேட்டேன்.
உங்களிடம் உவைஸ் பின் ஆமீர் வருவார். அவரோடு யமனைச் சோ்ந்த வேறு பலரும் இருப்பார்கள். அவர்‘முறாத்’ கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ஊர் ‘கர்ன்’. அது யமனின் ஒரு மாகாணம். குஷ்டத்தின் காரணமாக அவர் உடல் முழுவதும் வெண்மையாக இருக்கும்.
தன்னை பீடித்திருக்கின்ற குஷ்டத்தில் ஒரு திர்ஹத்தின் அளவைத் தவிர்த்து ஏனையவற்றை சுகமாக்குமாறு அல்லாஹ்விடம் துஆக் கேட்டார். அத்திர்ஹத்தின் அளவைப் பார்த்து உன் அருளை நினைத்து உனக்கு நான் நன்றி பாராட்டுவேன்.
இந்த மனிதரை நீங்கள் சந்தித்தால் தனக்காக இஸ்திஃபார் செய்யுமாறு துஆக் கேளுங்கள். மீண்டும் இவரைப் பற்றிய வர்ணனை நபியவர்கள் விபரித்தார்கள்.
அவரின் விழிகள் சிவந்து காணப்படும். முகமும் சிவப்புச் சார்ந்ததாக இருக்கும். அழுக்கினால் அவரின் உடல் நிறம் மாறுபட்டிருக்கும். அவரது கழுத்து நெஞ்சோடு நெருங்கிக் காணப்படும். அவரது விழிகள் சுஜுத் செய்யும் இடத்தை நோக்கியதாக இருக்கும். எப்பொழுதும் பார்வையைத் தாழ்த்தியே இருப்பார்.
அவரிடம் இரண்டு ஆடைகள் இருக்கும். அவர் வாழும் பகுதியில் அவரைப் பற்றி அறிமுகம் இருக்காது.ஆயினும், வானத்திலுள்ள மலக்குகள் அவரை நன்கு அறிவார்கள். அல்லாஹ்விடம் சத்தியம் செய்து அவர் கேட்டால் அல்லாஹ் உடன் அதனை நிறைவேற்றுவான்.
அவரது வலது தோல்பட்டைக்குக் கீழ் ஒரு திர்ஹம் அளவு வெள்ளை இருக்கும். நாளை மறுமையில் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறும்போது (நல்லவர்கள்) விரைந்து ஓடி சுவர்க்கம் செல்வர். ஆனால்,நில்லுங்கள்! பாவிகளுக்கு ஷபாஅத் செய்யுங்கள் என்று உவைசுக்குக் கூறப்படும். அவர் அறபிகள் மத்தியில் முளர், றபீஆ கோத்திரத்தாருக்கு ஷபாஅத் செய்வார்.
பின் ஹளரத் உமர், ஹளரத் அலி ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரைப் பார்த்து நபியவர்கள் கூறினார்கள், நீங்கள் இருவரும் அவரைச் சந்தித்தால் எனது உம்மத்துக்காக பாவமன்னிப்புக் கேட்குமாறு அவரிடம் கோர வேண்டும். இவர்கள் இருவரும் பத்து ஆண்டுகளாக அவரை எதிர்பார்த்தே இருந்தனர்.அவரின் சந்திப்புக் கிட்டவில்லை.
உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹு ஷஹீதாக்கப்பட்ட வருடம் உமர் ரழியல்லாஹு அன்ஹு மக்காவில் அபூகுபைஸ் மலை மேல் ஏறி நின்று உரத்த குரலில்,
யமன் வாசிகளே! உங்கள் மத்தியில் உவைஸ் என்ற பெயர் கொண்ட யாராவது இருக்கின்றார்களா?என்றதும், வயது முதிர்ந்த ஒருவர் எழுந்தார். உவைஸைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனாலும்,எனது சகோதரர் ஒருவர் இருக்கின்றார். நாங்கள் உங்களோடு அறிமுகப்படுத்திப் பேசும் அளவு அவர் தகுதி பெற்றவரல்ல. அவர் எங்களது ஒட்டகங்களை அறபா மைதானத்தின் பக்கம் மேய்த்துக் கொண்டிருக்கின்றார்.
ஹளரத் உமர், ஹளரத் அலி ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் அறபா மைதானம் விரைந்தனர். அங்கு நின்று கொண்டு தொழும் ஒரு நபரைக் கண்டார்கள். கலீபாக்கள் இருவரும் அவருக்கு ஸலாம் கூறிவிட்டு நீங்கள் யார்? என்று விசாரித்தார்கள். நான் ஓட்டகம் மேய்க்கும் ஒரு கூலித் தொழிலாளி என்றார் அவர். அதற்கு,
அவ்விருவரும் நாங்கள் கேட்பது அதுவல்ல. உங்கள் பெயர் என்ன? எனது பெயர் அப்துல்லாஹ் என்றார்.எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைதான். நாங்கள் உங்களிடம் கேட்பது தாய் உங்களுக்கு வைத்த பெயர் என்ன? என்னிடமிருந்து எதை விரும்புகின்றீர்கள்? என்று உவைஸ் கேட்டார். றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை அவரிடம் கூறிவிட்டு தங்களின் வலது தோள் பட்டையைக் காட்டுமாறு வேண்டினர். அவர் சட்டையை நீக்கி வலது புயத்தை திறந்து காட்டினார்.றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய அடையாளம் அங்கு காணப்பட்டது. அதுவேளை தங்களுக்கு பாவமன்னிப்புக் கிட்ட துஆச் செய்யுமாறு இவ்விருவரும் அவரிடம் வேண்டினர். அதற்கு அவர் நீங்கள் இருவரும் யார்? என்று கேட்க, இவ்விருவரும் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அவர் எழுந்து நின்று இவ்விருவருக்கும் கண்ணியமும், மரியாதையும் செய்யலானார். பின் உவைஸுல் கர்னி அவ்விருவரையும் பார்த்து,
அல்லாஹுதஆலா உம்மத்தே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தரப்பிலிருந்து நற்கூலி வழங்குவானாக! என்றபின் நபியவர்கள் கூறியபடி இவ்விருவருக்கும் இஸ்திஃபார் செய்தார்.
அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக! சற்று நேரம் இங்கே தரித்து நில்லுங்கள். தங்களுக்கு பிரயாண சாதமும், ஆடையும் கொண்டு வந்து தருகின்றேன் என்று ஹளரத் உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹு கூறியதும், அதற்கு,
இதன் பின் நீங்கள் என்னைச் சந்திப்பீர்கள் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. நான் பிரயாண சாதத்தையும், ஆடையையும் பெற்று என்ன செய்ய முடியும்? என்று கூறிவிட்டு இபாதத் செய்வதில் கவனத்தைச் செலுத்தினார்.
ஆதாரம் : அஸ்ஸீரத்துன் நபவிய்யா பாகம் - 03, பக்கம் - 183
No comments:
Post a Comment